கர்நாடகத்தில் ஒரே நாளில் 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மந்திரி சுதாகர் பேட்டி


கர்நாடகத்தில் ஒரே நாளில் 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மந்திரி சுதாகர் பேட்டி
x
தினத்தந்தி 2 Sep 2021 10:53 PM GMT (Updated: 2 Sep 2021 10:53 PM GMT)

ஒரே நாளில் 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு நாட்டிலேயே கர்நாடகம் முதலிடத்தை பிடித்துள்ளதாக மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளின் நிலவரம் குறித்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது;-

“கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாரந்தோறும் புதன்கிழமைகளில் மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று (நேற்று முன்தினம்) மாநிலம் முழுவதும் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒரே நாளில் 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அரசின் இலக்கையும் தாண்டி தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 12 லட்சத்து 4 ஆயிரத்து 402 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். பெங்களூருவில் மட்டும் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 488 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுளளனர். இதற்கு அடுத்தபடியாக பெலகாவியில் 99 ஆயிரத்து 973 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். ஒரே நாளில் தடுப்பூசி போடுவதில் நாட்டிலேயே கர்நாடகத்தில் தான் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஒட்டு மொத்தமாக மற்ற மாநிலங்களை காட்டிலும் கர்நாடகத்தில் தடுப்பூசி போடுவதில் முன் மாதிரியாக விளங்குகிறது. கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாக தான இருக்கிறது. கேரளாவில் இருந்து வருபவர்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஒரு வாரம் தனிமைப்படுத்தும் விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. நீட் உள்ளிட்ட தேர்வுகளின் போது இந்த தனிமைப்படுத்தல் மிகவும் கடினமானதாகும். கேரளாவில் இருந்து வருபவர்கள் வாரத்திற்கு ஒரு முறை ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழை கண்டிப்பாக வழங்க வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story