வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவது சாத்தியமில்லை: சுப்ரீம் கோர்ட்டு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 Sep 2021 1:50 AM GMT (Updated: 9 Sep 2021 1:50 AM GMT)

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

ஏழைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று யூத் பார் அசோசியேசன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், நாடு முழுவதும் 60 சதவீதம் பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. நகர்ப்புறங்களுக்கும், கிராமப் பகுதிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. 

மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசம் உள்ளது. வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசியை செலுத்துவது சாத்தியமில்லை. இது அரசின் கொள்கை முடிவு. அதில் தலையிட்டு, வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர். உரிய அரசு அமைப்புகளிடம் கோரிக்கை விடுக்கவும் அறிவுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து நடந்த மற்றொரு பொதுநல மனுவும் இதே அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் ஒவ்வொரு கொரோனா மரணத்தையும் மருத்துவ அலட்சியமாகக் கருதி குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட அனைத்து உயிரிழப்பையும் மருத்துவ அலட்சியத்தால் ஏற்பட்டதாக கருத முடியாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர். 

Next Story