நிலக்கரி பற்றாக்குறையால் கர்நாடகம் இருளில் மூழ்கும் அபாயம்: டி.கே.சிவக்குமார்


நிலக்கரி பற்றாக்குறையால் கர்நாடகம் இருளில் மூழ்கும் அபாயம்: டி.கே.சிவக்குமார்
x
தினத்தந்தி 22 Oct 2021 7:56 PM GMT (Updated: 22 Oct 2021 7:56 PM GMT)

நிலக்கரி பற்றாக்குறையால் கர்நாடகம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக டி.கே.சிவக்குமார் கூறினார்.

பசவராஜ் பொம்மை

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ஹனகல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அங்கு நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

சித்தராமையா ஆட்சியில் ஹனகல் தொகுதியின் வளர்ச்சிக்கு என்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேள்வி கேட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இந்த தொகுதிக்கு என்ன செய்யப்பட்டது என்பது குறித்து அரசு ஆவணங்களில் உள்ளன. அதை பசவராஜ் பொம்மை எடுத்து பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இலவச அரிசி

காங்கிரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் செய்த திட்டங்கள் மற்றும் பா.ஜனதா ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்ன என்பது குறித்து விவாதிக்க நான் தயாராக உள்ளேன். இதற்கு பசவராஜ் பொம்மை தயாரா?. விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிப்பதாக பிரதமர் மோடி உள்பட பா.ஜனதா தலைவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக அதிகரித்து உள்ளதா?.

சித்தராமையா ஆட்சியில் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதனால் ஏழை மக்கள் வயிறாற உணவு உண்ணுகிறார்கள். அவர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பதாக பா.ஜனதாவினர் கூறினார்கள். ஆனால் மாறாக பெட்ரோல் விலை லிட்டர் ரூ.110-ஐ தாண்டிவிட்டது. டீசல் விலை ரூ.100-ஐ தொட்டுவிட்டது. சமையல் கியாஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சாதி-மதங்கள்

மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். அவ்வாறு வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடப்பட்டதா?. நாங்கள் அனைத்து சாதி-மதங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்கிறோம். நிலக்கரி பற்றாக்குறையால் கர்நாடகம் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்திற்கு வர வேண்டிய நிதி வரவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.


Next Story