காஷ்மீர்:பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்...


காஷ்மீர்:பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்...
x
தினத்தந்தி 26 Oct 2021 4:41 AM GMT (Updated: 26 Oct 2021 4:42 AM GMT)

உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை கொண்டாடிய காஷ்மீர் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

டி20 உலகக்கோப்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூகவலைதளத்தில் இந்திய பாகிஸ்தான் ரசிகர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை காஷ்மீரில் உள்ள மருத்துவக்கல்லூரி மாணவ/மாணவிகள் கொண்டாடினர். மருத்துவக்கல்லூரி விடுதியில் திரண்டிருந்த மாணவ மாணவிகள் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்ததை கொண்டாடினர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

இந்நிலையில், இந்தியா தோல்வியடைந்ததை கொண்டாடிய ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் பல்கலை கழக மாணவர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

    

Next Story