போதைப்பொருள் வழக்கில் பணியிட மாற்றம்; சமீர் வான்கடே மறுப்பு


போதைப்பொருள் வழக்கில் பணியிட மாற்றம்;  சமீர் வான்கடே மறுப்பு
x
தினத்தந்தி 6 Nov 2021 6:16 AM GMT (Updated: 6 Nov 2021 7:32 AM GMT)

ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் இருந்து சமீர் நீக்கப்பட்டதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சமீர் வான்கடே மறுத்து உள்ளார்.

மும்பை

மும்பை - கோவா சொகுசு கப்பலில் கடந்த 2-ந் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் போது கப்பலில் போதை விருந்து நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கு மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.


ஆர்யன் கான்  போதைப்பொருள் வழக்கின் விசாரணை  போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை மண்டலத்தில் இருந்து வெள்ளிக்கிழமை ஏஜென்சியின் மத்திய குழுவுக்கு மாற்றப்பட்டது. மும்பை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டு வரும் சமீர் வான்கடே, இனி விசாரணையை மேற்பார்வையிட மாட்டார் என தகவல் வெளியானது. ஆனால் இதனை மும்பை போதைப்பொருள்  தடுப்பு பிரிவு மறுத்து உள்ளது.

இதற்கிடையில், ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் இருந்து சமீர்  நீக்கப்பட்டதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சமீர் வான்கடே, நான் போதைப்பொருள் தடுப்பு பிரிவின்  மும்பை பிரிவின் மண்டல இயக்குநராக இருக்கிறேன், அப்படியே இருப்பேன். அந்தப் பதவியில் இருந்து நான் நீக்கப்படவில்லை" என கூறினார்.

சமீர் வான்கடேவின் மனைவி கிராந்தி ரெட்கர் மற்றும் சகோதரி யாஸ்மீன் வான்கடே ஆகியோர் டுவிட்டரில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அறிக்கையை சுட்டிக்காட்டி  அவர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

Next Story