பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு


பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2022 11:50 PM GMT (Updated: 17 Jan 2022 11:50 PM GMT)

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.



புதுடெல்லி,


117 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டமன்றத்திற்கு பிப்ரவரி 14ந்தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  ஆனால், சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு ரவிதாஸ் ஜெயந்தி ஆண்டுதோறும் பிப்ரவரி 10 முதல் 16 வரை கடைபிடிக்கப்படுகிறது.

குரு ரவிதாஸ் ஜெயந்தியையொட்டி சீக்கியர்கள் உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் பகுதிக்கு புனிதப்பயணம் மேற்கொள்வர்கள். அங்கு உள்ள குரு ரவிதாஸ் நினைவிடத்தில் அவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.

தற்போது, சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 14ந்தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் சீக்கியர்கள் தங்களின் புனித பயணமான குரு ரவிதாஸ் நினைவிடத்திற்கு செல்வதில் இடையூறு ஏற்படலாம். 

இதனால், தேர்தலில் வாக்களிக்கும் சீக்கியர்களின் எண்ணிக்கையும் குறையலாம். இதனை தொடர்ந்து, தேர்தலை தள்ளிவைக்கக்கோரி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கடிதம் எழுதின.

இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக்கு பிறகு பஞ்சாப் தேர்தல் தேதியை 20ந்தேதிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Next Story