4-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி; டெல்லி நோக்கி நாளை பேரணி என விவசாயிகள் அறிவிப்பு


4-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி; டெல்லி நோக்கி நாளை பேரணி என விவசாயிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2024 8:28 PM GMT (Updated: 20 Feb 2024 6:56 AM GMT)

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்தியஅரசு தெரிவித்த யோசனைகளை விவசாயிகள் நிராகரித்து விட்டனர்

புதுடெல்லி,

வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது, கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு வாபஸ் பெற்றது. அதே சமயத்தில் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் விவசாயிகள் போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், 2 ஆண்டுகள் கழித்து விவசாயிகள் மீண்டும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர். டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லிக்கு படையெடுத்தனர்.

நடப்பு ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இந்த போராட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. மாணவர்களின் தேர்வும் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், விவசாயிகளின் போராட்டம் சூடு பிடித்து வருகிறது.

இந்நிலையில், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய மந்திரிகளுடன் விவசாய சங்கத்தினர் 8, 12 மற்றும் 15 ஆகிய நாட்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். ஆனால், அதில் முன்னேற்றம் காணப்படவில்லை. இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்று கிழமை 4-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன் பின்னர் பஞ்சாப் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி என்ற விவசாய சங்கத்தின் பொது செயலாளர் சர்வான் சிங் பாந்தர் கூறும்போது, குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றிய அரசின் முன்மொழிதலை பற்றி அடுத்த 2 நாட்களில் நாங்கள் ஆலோசனை மேற்கொள்வோம். எங்களுடைய பிற கோரிக்கைகளை பற்றி அரசும் தீர ஆலோசனை மேற்கொள்ளும்.

இதில், முடிவு எதுவும் கிடைக்கவில்லை என்றால், எங்களுடைய டெல்லி செல்லும் பேரணியை 21-ந்தேதி நாங்கள் தொடருவோம் என்று கூறினார். விவசாய சங்க தலைவர் ஜகஜித் சிங் தல்லேவால் கூறும்போது, எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை டெல்லி செல்லும் போராட்டம் தொடரும் என கூறினார்.

இதேபோன்று, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பியூஷ் கோயல், விவசாய பிரதிநிதிகளுடன் ஒரு ஆக்கப்பூர்வ மற்றும் விரிவான விவாதம் நடைபெற்றது. அரசின் முன்மொழிவுகளை பற்றிய அவர்களின் முடிவை விவசாய தலைவர்கள் நாளை அறிவிப்பார்கள் என்று கூறினார்.

இந்த நிலையில், 4-வது சுற்று பேச்சுவார்த்தையின்போது, பருப்புகள், மக்காசோளம் மற்றும் பருத்தி பயிர்களை அரசு அமைப்புகள் 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் என மத்திய அரசு முன்மொழிந்தது. இதுபற்றி விவசாயிகளுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளவும் முன்வந்தது.

ஆனால், அரசின் இந்த முடிவை ஏற்காமல், விவசாயிகள் நிராகரித்து விட்டனர். இது விவசாயிகளின் நலன்களுக்கானது இல்லை என கூறியுள்ளனர். இதனால், நாளை (புதன் கிழமை) டெல்லி நோக்கி பேரணியாக செல்வது என முடிவு செய்து அதற்கான அறிவிப்பை அவர்கள் வெளியிட்டனர்.

இதுபற்றி சர்வான் சிங் பாந்தர் கூறும்போது, ஒன்று எங்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள் அல்லது தடுப்பான்களை நீக்கி விட்டு, அமைதியாக போராடுவதற்காக டெல்லி நோக்கி செல்ல எங்களை அனுமதியுங்கள் என கூறியுள்ளார்.


Next Story