அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்; போலீஸ் வலைவீச்சு


அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்; போலீஸ் வலைவீச்சு
x

சமைப்பதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சிக்கமகளூரு;

சமைப்பதில் தகராறு

தாவணகெரே டவுன் கே.டி.ஜே. நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட நிட்டுவள்ளி பகுதியை சேர்ந்தவர் சவுகத்அலி (வயது 23). இவரது தம்பி ஜமீர்பாஷா (வயது 22). கூலி தொழிலாளர்களான இவர்கள், டாங்கே பார்க் பகுதியில் தாயுடன் குடிசையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்களது தாய், சமைத்து சாப்பிடும்படி கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து சவுகத் அலியும், ஜமீர் பாஷாவும் சமைக்க தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் சமைப்பது தொடர்பாக அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றி ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

கத்தியால் குத்திக் கொலை

அப்போது ஆத்திரமடைந்த ஜமீர் பாஷா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அண்ணன் என்றும் பாராமல் சவுகத் அலியை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயமடைந்த சவுகத் அலி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜமீர் பாஷா, அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கே.டி.ஜே. நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான சவுகத் அலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபருக்கு வலைவீச்சு

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சமைப்பதில் ஏற்பட்ட தகராறில் சவுகத் அலியை, ஜமீர் பாஷா கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கே.டி.ஜே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஜமீர் பாஷாவை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story