ஆந்திர பிரதேசம்: மனைவி, மகளை மறைத்து பிளஸ் 2 மாணவியை மணந்த ஆசிரியர்


ஆந்திர பிரதேசம்:  மனைவி, மகளை மறைத்து பிளஸ் 2 மாணவியை மணந்த ஆசிரியர்
x

ஆந்திர பிரதேசத்தில் மனைவி, மகளை மறைத்து, பிளஸ் 2 மாணவியை தந்திரமுடன் ஏமாற்றி மணந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சித்தூர்,

ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் கங்காவரம் மண்டல பகுதியை சேர்ந்தவர் சலபதி (வயது 33). இவருக்கு திருமணம் நடந்து மனைவி, மகள் உள்ளனர்.

அவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது பள்ளி மாணவி ஒருவரிடம் பேச்சு கொடுத்து அவரை வசப்படுத்தி உள்ளார். இதுபற்றி காவல் துணை ஆய்வாளர் சுதாகர் ரெட்டி கூறும்போது, அந்த மாணவிக்கு கடந்த புதன்கிழமை இறுதி தேர்வுகள் நடந்து உள்ளன.

தேர்வு முடிந்த கையோடு, மாணவியிடம் பல பொய்களை பேசி அவரை அழைத்து கொண்டு ஆசிரியர், திருப்பதிக்கு சென்று உள்ளார். ஆசிரியர், அந்த மாணவியிடம் நான் நேர்மையான நபர் என கூறியதுடன், தன்னை நம்பும்படியும் கேட்டு கொண்டார். உன்னை நன்றாக கவனித்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

இதன்பின்பு 2 பேரும் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னரே, ஆசிரியரின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாறுதலை மாணவி கவனித்து உள்ளார்.

நடந்த சம்பவம் எல்லாவற்றையும் பற்றி பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதன்பின்னர், பெற்றோர் மற்றும் அந்த மாணவி கங்காவரம் காவல் நிலையத்தில் வியாழ கிழமை இரவில் புகார் அளித்து உள்ளனர். எப்.ஐ.ஆர். ஒன்றும் பதிவாகி உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இதன்பின் நடவடிக்கை மேற்கொண்டு சலபதியை போலீசார் கைது செய்து உள்ளனர். இதனை தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.


Next Story