கேரளா முதல்-மந்திரி தனி செயலாளரின் மனைவிக்கு பதவி நியமனம்: ஐகோர்ட்டு இடைக்கால தடை


கேரளா முதல்-மந்திரி தனி செயலாளரின் மனைவிக்கு பதவி நியமனம்:  ஐகோர்ட்டு இடைக்கால தடை
x

கேரளாவில் பல்கலை கழகத்தின் இணை பேராசிரியர் பதவிக்கு முதல்-மந்திரி தனி செயலாளரின் மனைவியை நியமனம் செய்வதற்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது.



கொச்சி,



கேரளாவில் கண்ணூர் பல்கலை கழகத்தில் மலையாளம் துறையில் இணை பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த 6 பேரில் ஒருவர் பிரியா வர்கீஸ். இவர், முதல்-மந்திரி பினராயி விஜயனின் தனி செயலாளரான கே.கே. ராகேஷ் என்பவரின் மனைவியாவார்.

இந்த பதவிக்கான தேர்வில் கலந்து கொண்ட 6 பேரில் பிரியா வர்கீசின் மதிப்பெண்கள் மிக மோசம் என்ற அளவில் இருந்துள்ளன. எனினும், துணை வேந்தர் தலைமையிலான கமிட்டி நடத்திய நேர்காணலுக்கு பின்னர், தர வரிசை பட்டியலில் அவர் முன்னிலை பெற்றார்.

இதனை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. இந்த பதவிக்கான வேட்பாளர்களில் ஒருவரான ஜோசப் ஸ்கேரியா, 651 மதிப்பெண்களுடன் இறுதி தரவரிசை பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார்.

ஆனால், பிரியா வர்கீஸ் 156 மதிப்பெண்களை மட்டுமே பெற்று தரவரிசையில் முன்னிலையில் இடம் பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து, மாநில பல்கலை கழகங்களுக்கான வேந்தரான கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், கடந்த வாரம் பிரியாவின் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து விட்டார்.

குடும்ப உறவு முறைகளுக்கு பதவி வழங்கும் அதிகார முறைகேடு நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிராக பல்கலை கழகத்தின் சிண்டிகேட் சார்பில் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட ஐகோர்ட்டு, பிரியா வர்கீசின் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இந்த தடையுத்தரவு வருகிற 31-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story