5-வது மாடியில் இருந்து கீழே வீசி பச்சிளம் குழந்தை கொலை: திடுக்கிடும் தகவல்கள்


5-வது மாடியில் இருந்து கீழே வீசி பச்சிளம் குழந்தை கொலை: திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 3 May 2024 10:23 PM GMT (Updated: 4 May 2024 2:48 AM GMT)

பச்சிளம் குழந்தையை கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடவந்தரா அருகே பனம்பள்ளி வித்யா நகரில் துப்புரவு பணியாளர்கள் நேற்று குப்பைகளை சேகரிக்கும் போது, சாலையில் பிளாஸ்டிக் கவர் ஒன்று கிடந்துள்ளது. அந்த பிளாஸ்டிக் கவரை திறந்து பார்த்த போது அதற்குள் தொப்புள் கொடி கூட வெட்டப்படாத நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள், இதுகுறித்து எர்ணாகுளம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குழந்தையை சாலையில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் போலீசார் சோதனை நடத்தியபோது ஒரு வீட்டின் கழிப்பறையில் ரத்த கறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், தகாத உறவால் திருமணமாகாத 20 வயது இளம்பெண் கர்ப்பமானதை வெளியே தெரியாமல் அவர் மற்றும் அவரது பெற்றோர் மறைத்து வந்து உள்ளனர். நேற்று வீட்டிலேயே இளம்பெண் பிரசவித்து உள்ளார். அவருக்கு பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையை சில மணி நேரத்திலேயே கொரியர் கவரில் சுற்றி அவரது தாய், தந்தை ஆகியோர் 5-வது மாடியில் இருந்து கீழே வீசி கொலை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து இளம்பெண், அவரது தாய், தந்தை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொரியர் கவரில் இருந்த பார் கோடை ஸ்கேன் செய்ததன் மூலம் கைதான 3 பேர் வசிக்கும் முகவரியை போலீசார் கண்டறிந்தனர். பச்சிளம் குழந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story