திடீரென பாலத்தின் நடுவில் யு-டர்ன் எடுத்த இ-ரிக்சா... அடுத்து நடந்த பயங்கர விபத்து


திடீரென பாலத்தின் நடுவில் யு-டர்ன் எடுத்த இ-ரிக்சா... அடுத்து நடந்த பயங்கர விபத்து
x
தினத்தந்தி 28 April 2024 9:42 AM GMT (Updated: 28 April 2024 9:58 AM GMT)

விபத்தில் இறந்தவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இ- ரிக்சாடிரைவரை தேடி வருகின்றனர்.

புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள ஒரு பாலத்தின் நடுவில் நிகழ்ந்த பயங்கர விபத்து சக பயணிகளை அதிர்ச்சியடைய வைத்தது.

நேற்று காலையில் வழக்கம்போல் அந்த பாலத்தில் போக்குவரத்து பிசியாக இருந்தது. அப்போது பாலத்தின் நடுப்பகுதியில் ஒரு இ-ரிக்சா திடீரென யு-டர்ன் எடுத்தது. பின்னால் வந்த ஒரு பைக் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இ-ரிக்சாமீது மோதியது. பைக்கில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். இதனால் பயந்துபோன இ-ரிக்சா டிரைவர் வேகமாக வாகனத்தை இயக்கி தப்பிச்சென்றார்.

உயிருக்குப் போராடிய பைக் டிரைவரை சக பயணிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இறந்தவரின் பெயர் ஆகாஷ் சிங் என்பதும் வேலைக்கு செல்லும்போது விபத்தில் இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான இ-ரிக்சா டிரைவரை தேடி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி. வீடியோ வெளியாகி உள்ளது.

இ-ரிக்சாக்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அவர்களால் சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story