4 குழந்தைகளின் தாயிடம் இருந்து வியாபாரி, விவாகரத்து பெற்றது செல்லும்


4 குழந்தைகளின் தாயிடம் இருந்து வியாபாரி, விவாகரத்து பெற்றது செல்லும்
x

4 குழந்தைகளுக்கு தாய் என்பதை மறைத்து 2-வது திருமணம் செய்ததால் வியாபாரிக்கு விவாகரத்து வழங்கியது செல்லும் என்று குடும்ப நல கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு:

4 குழந்தைகளுக்கு தாய் என்பதை மறைத்து 2-வது திருமணம் செய்ததால் வியாபாரிக்கு விவாகரத்து வழங்கியது செல்லும் என்று குடும்ப நல கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

4 குழந்தைகளின் தாய்

துமகூரு மாவட்டத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், கடந்த 2015-ம் ஆண்டு அந்த பெண்ணுக்கும், ஒரு வியாபாரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அந்த பெண் முதல் திருமணத்தை மறைத்து கடந்த 2016-ம் ஆண்டு மே 20-ந் தேதி வியாபாரியை 2-வதாக திருமணம் செய்திருந்தார்.

திருமணம் முடிந்த ஒரு வாரம் கழித்து தான் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 4 குழந்தைகள் இருப்பது வியாபாரிக்கு தெரியவந்தது. இதையடுத்து, முதல் திருமணத்தை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதால் விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டில் வியாபாரி வழக்கு தொடர்ந்தார்.

வியாபாரிக்கு விவாகரத்து

வழக்கை விசாரித்த குடும்ப நல கோர்ட்டு, அந்த பெண்ணிடம் இருந்து வியாபாரிக்கு விவாகரத்து வழங்கி கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டு இருந்தது. வியாபாரியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்கியதை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் அந்த பெண் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

அப்போது அந்த பெண் 4 குழந்தைகளின் தாய் என்பதை மறைத்தும், முதல் கணவருக்கு தெரியாமலும் 2-வது திருமணம் செய்தது ஆதாரத்துடன் நிரூபணமாகி உள்ளது. அதனால் குடும்ப நல கோர்ட்டு வழங்கிய விவாகரத்து செல்லும். குடும்ப நல கோர்ட்டு ஏற்கனவே வழங்கிய தீர்ப்பின்படி பெண்ணிடம் இருந்து 2-வது கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story