திருப்பதி கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்


திருப்பதி கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
x

கோடை மற்றும் வாரவிடுமுறை என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர்.

கோடை மற்றும் வாரவிடுமுறை என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கோவிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதில் தேதி, நேரம் குறிப்பிட்ட (எஸ்.எஸ்.டி. டோக்கன்) இலவச தரிசன டோக்கன் பெறாமல் நேராக வைகுண்டம் கியூ காம்ப்ளக்சுக்கு வந்து கம்பார்ட்மெண்டுகளில் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 43 மணிநேரம் ஆகிறது.

இதனால், வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர். திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் ஆன்மிக யாத்திரையை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.

வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் சாமி தரிசனத்துக்காக தங்கி உள்ள பக்தர்கள் தங்கள் முறை வரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும், என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் 60 ஆயிரத்து 101 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் உள்ள கல்யாணக் கட்டாக்களில் 30 ஆயிரத்து 991 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பிரதான உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் உடனுக்குடன் எண்ணப்பட்டதில் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.4 கோடியே 3 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story