வெப்ப அலை வீசும்.. தேர்தல் காலத்தில் நாடு முழுவதும் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை


வெப்ப அலை வீசும்.. தேர்தல் காலத்தில் நாடு முழுவதும் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 April 2024 7:43 AM GMT (Updated: 2 April 2024 7:44 AM GMT)

நாடு முழுவதும் ஜூன் வரை கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலமாகும். இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதுவும் சமீபத்திய சில ஆண்டுகளாக கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து உள்ளது. சில இடங்களில் வெப்ப அலையும் வீசும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தற்போது கோடை காலம் தொடங்கியிருக்கும் நிலையில், வெயில் கொடுமை இப்போதே வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. மதியம் 2 மணிக்கு வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இது மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்து வருகிறது.

இதில் மேலும் பேரிடியாக, நாடு முழுவதும் ஜூன் வரை கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத்துறை இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறியிருப்பதாவது:-

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். மத்திய மற்றும் மேற்கு தீபகற்ப இந்தியா பகுதிகளில் இதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

குஜராத், மத்திய மராட்டியம், வடக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, வடக்கு சத்தீஷ்கார் மற்றும் ஆந்திரா போன்ற பகுதிகள் வெப்ப அலையின் மோசமான தாக்கத்தை அனுபவிக்கும்.

இதைப்போல மத்திய இந்தியாவின் பல பகுதிகளிலும், வட சமவெளி மற்றும் தென்னிந்தியாவை ஒட்டிய பகுதிகளிலும் வழக்கமான வெப்ப அலை நாட்கள் அதிகமாக இருக்கலாம்.

இவ்வாறு மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறினார்.

இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. வாக்குப்பதிவு தினத்தன்று வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். இதனால் வாக்குச்சாவடிகளில் பந்தல், குடிநீர் போன்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


Next Story