எனக்கு ஒரு சந்தேகம்...!! 11 நாட்கள் பிரதமர் மோடி விரதம் மேற்கொண்டாரா? காங்கிரஸ் தலைவர் பேச்சால் சலசலப்பு


எனக்கு ஒரு சந்தேகம்...!! 11 நாட்கள் பிரதமர் மோடி விரதம் மேற்கொண்டாரா? காங்கிரஸ் தலைவர் பேச்சால் சலசலப்பு
x
தினத்தந்தி 23 Jan 2024 4:49 PM GMT (Updated: 23 Jan 2024 4:51 PM GMT)

அப்படி விரதம் மேற்கொள்ளாமல், ராமர் கோவிலின் கருவறைக்குள் அவர் நுழைந்திருக்கிறார் என்றால், அந்த இடம் புனிதமற்ற ஒன்றாகி இருக்கும். அந்த இடத்தில் இருந்து ஆற்றல் உற்பத்தியாகாது என்றும் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கான சடங்குகளின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டார்.

கும்பாபிஷேக விழா தினத்தன்று, சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் பாலை கொண்டு உருவான இனிப்பு சுவை நிறைந்த பானம் ஒன்றை குடித்து விரத நிறைவை மேற்கொண்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, நான் காலையில் டாக்டர் ஒருவருடன் நடைப்பயிற்சி சென்றபோது, ஒரு மனிதன் 11 நாட்கள் விரதம் இருக்கும்போது உயிருடன் இருக்க முடியாது என கூறினார்.

அவர் (பிரதமர்) உயிருடன் இருக்கிறார் என்றால், அது அற்புத செயலா? அதனால், அவர் விரதம் மேற்கொண்டாரா? என எனக்கு சந்தேகம் எழுகிறது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, அப்படி விரதம் மேற்கொள்ளாமல், ராமர் கோவிலின் கருவறைக்குள் அவர் நுழைந்திருக்கிறார் என்றால், அந்த இடம் புனிதமற்ற ஒன்றாகி இருக்கும். அந்த இடத்தில் இருந்து ஆற்றல் உற்பத்தியாகாது என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், கர்நாடக பா.ஜ.க. எம்.பி.யான லஹார் சிங் சிரோயா கூறும்போது, ஒரு சிறந்த எழுத்தாளர் என்ற முகமூடியை அணிந்து கொண்டு சுற்றி திரியும் வீரப்ப மெய்லி, அவரை போன்றே எல்லோரும் போலியானவர்கள் என நினைக்கிறார்.

காந்தி குடும்பத்திற்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதில் அல்ல. கடவுள் ராமர் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றால், நீங்கள் விரதமிருந்து, உயிர் வாழ முடியும். அந்த குடும்பத்திற்கு திருப்தி ஏற்படுத்தும் இந்த முயற்சியால், மொய்லிக்கு சிக்பள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு காங்கிரசிடமிருந்து சீட் கிடைக்காது என்று கூறியுள்ளார்.


Next Story