கர்நாடக சட்டசபை தேர்தல்; பா.ஜ.க.வுக்கு பிரசாரம்: கன்னட சூப்பர்ஸ்டார் கிச்சா சுதீப் பேட்டி


கர்நாடக சட்டசபை தேர்தல்; பா.ஜ.க.வுக்கு பிரசாரம்:  கன்னட சூப்பர்ஸ்டார் கிச்சா சுதீப் பேட்டி
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பிரசாரம் செய்வேன் என்றும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் கன்னட சூப்பர்ஸ்டார் கிச்சா சுதீப் பேட்டியில் கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 10-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆட்சியை தக்க வைக்க ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் போட்டி போட்டு திட்டங்களை வகுத்து வருகின்றன.

இந்த நிலையில், பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப், பா.ஜ.க.வில் இணைய இருக்கிறார் என தகவல் வெளியானது. நடிகர் சுதீப் மட்டுமின்றி இன்னும் பல பிரபலங்களை தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பா.ஜ.க. சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் தனக்கு அரசியல் அழைப்புகள் வருகின்றன என்று நடிகர் சுதீப் தெரிவித்திருந்த நிலையில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்து பேசியிருந்தது பெரிதளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில், அவர் பெங்களூரு விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, பா.ஜ.க.வுக்கு நான் தேர்தல் பிரசாரம் மட்டுமே செய்வேன் என கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் ஒரு வேட்பாளராக அவர் போட்டியிடுவது பற்றிய யூகங்களுக்கு பதிலளித்த சுதீப், சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை கன்னட சூப்பர்ஸ்டார் கிச்சா சுதீப் இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது பேசிய முதல்-மந்திரி, சுதீப் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். எனக்கு ஆதரவை அவர் தெரிவித்து உள்ளார். எனக்கு அளித்த ஆதரவானது கட்சியையும் (பா.ஜ.க.) அவர் ஆதரிக்கிறார் என்றே அர்த்தம் ஆகும் என்று கூறியுள்ளார்.


Next Story