உத்தரகாண்டில் நிலச்சரிவு - சாலை அடித்துச் செல்லப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதி


உத்தரகாண்டில் நிலச்சரிவு - சாலை அடித்துச் செல்லப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதி
x

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் இன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

புதுடெல்லி

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் இன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முக்கிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால் வெறியேற முடியாமல் சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகின்றனர். பத்ரிநாத் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7-ன் ஒரு பகுதி சாமோலி மாவட்டத்தில் உள்ள சின்கா அருகே சரிந்த மண்ணால் மூடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, அண்டை மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மற்றும் குலுவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில், சுற்றுலா பயணிகள் உள்பட 200 பேர் சிக்கினர். இந்த சம்பவம் நடைபெற்ற மூன்று நாட்களில் சாமோலியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களால் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியோகி உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரகாண்ட் மாநிலத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story