பீகாரில் மார்ச் மாதத்தில் 40-க்கும் மேலான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்; மத்திய மந்திரி குற்றச்சாட்டு


பீகாரில் மார்ச் மாதத்தில் 40-க்கும் மேலான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்; மத்திய மந்திரி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 April 2023 11:08 AM GMT (Updated: 2 April 2023 11:20 AM GMT)

பீகாரில் மார்ச் மாதத்தில் 40-க்கும் மேலான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்து உள்ளன என மத்திய மந்திரி நித்யானந்த ராய் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

பாட்னா,

நாடு முழுவதும் ராமநவமி கொண்டாட்டங்கள் கடந்த 30-ந்தேதி நடந்தன. இதன் ஒரு பகுதியாக பீகாரிலும் பல்வேறு நகரங்களில் சாமி சிலைகள் ஊர்வலம், சிலை கரைப்பு உள்ளிட்டவை நடந்தன. இதனை முன்னிட்டு, நாலந்தா மற்றும் சசராம் ஆகிய மாவட்டங்களில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறை பரவியதில் 8 பேர் காயமடைந்தனர். 3 பேருக்கு துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து நாலந்தா மாவட்டத்தின் பீஹார்ஷெரீப் மற்றும் ரோத்தாஸ் மாவட்டத்தின் சசராம் நகர பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதுபற்றி பீகார் போலீசார் விசாரணை மேற்கொண்டு 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். நாலந்தாவில் 27 பேரும், ரோத்தாசில் 18 பேரும் கைது செய்யப்பட்டனர். மூத்த அதிகாரிகளும் வன்முறை பரவிய பகுதிகளில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பீகாரில் மீண்டும் நேற்றிரவு வன்முறை ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இதுபற்றி நாலந்தா மாவட்டத்தின் பீகார்ஷெரீப் நகரின் போலீஸ் சூப்பிரெண்டு அசோக் மிஷ்ரா கூறும்போது, வன்முறையை தொடர்ந்து போலீசார் நேற்றிரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, 8 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கூடுதல் படைகள் குவிக்கப்பட உள்ளன என கூறினார்.

நாலந்தா மாவட்ட மாஜிஸ்திரேட் ஷஷாங்க் சுபாங்கர் கூறும்போது, பீகார்ஷெரீப் பகுதியில் 2, 3 இடங்களில் நேற்றிரவு புதிதாக வன்முறை ஏற்பட்டது. தற்போது நிலைமை அமைதியாக உள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஊரடங்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. சமூக விரோதிகள் பலர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதுவரை 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

பீகாரில் வன்முறை சம்பவம் பற்றியும், தற்போதுள்ள நிலைமை பற்றியும் கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரிடம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விரிவான விவரங்களை தொலைபேசி வழியே கேட்டறிந்து உள்ளார். இதேபோன்று, வன்முறை பரவிய இடங்களுக்கு தேவையான மத்திய ஆயுத போலீஸ் படைகள் (சி.ஆர்.பி.எப்., எஸ்.எஸ்.பி. மற்றும் ஐ.டி.பி.பி.) அனுப்பப்படும் என்று அவர் உறுதி கூறியுள்ளார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பீகாரில் வன்முறை பரவிய நிலையில், மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, பீகாரில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து உள்ளது.

நீங்கள், கடந்த மார்ச் மாத தரவுகளை எடுத்து பார்த்தீர்கள் என்றால் தெரியும். 40-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்து உள்ளன. ஒரு மாதத்தில் சந்தேக அடிப்படையிலான மரணங்கள் 200 எண்ணிக்கையை தொட்டு உள்ளன.

அப்படியென்றால், பீகாரில் சட்டம் மற்றும் ஒழுங்கு என்ன நிலைமையில் உள்ளது? என எண்ணி பாருங்கள். பீகாரில் தேஜஸ்வி மற்றும் நிதிஷ் குமாரின் கூட்டணி அரசானது வளர்ச்சி, சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் பீகார் மாநில சொந்த மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளவில்லை.

அரசுக்கு எதிர்மறையான சிந்தனை உள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கை புறக்கணிக்கிறது. பீகாரில் குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு தஞ்சம் அளிக்கப்படுகிறது. அவர்கள் கட்டுப்பாடின்றி சுதந்திரமுடன் சுற்றி திரிகின்றனர். சமூகத்தில் பதற்றங்களுக்கான சதி திட்டங்களை உருவாக்கும் மக்களிடம் இருந்து பீகார் அரசு பாதுகாப்பை பெறுகிறது என்று குற்றச்சாட்டாக அவர் கூறியுள்ளார்.


Next Story