கோடியில் ஒருவர்... வயிற்று வலி சிகிச்சைக்கு சென்ற வாலிபருக்கு பேரதிர்ச்சி


கோடியில் ஒருவர்... வயிற்று வலி சிகிச்சைக்கு சென்ற வாலிபருக்கு பேரதிர்ச்சி
x
தினத்தந்தி 25 Dec 2022 5:27 AM GMT (Updated: 25 Dec 2022 5:31 AM GMT)

ஜார்க்கண்டில் பல நாட்களாக இருந்து வந்த வயிற்று வலிக்கு சிகிச்சை பெற சென்ற வாலிபருக்கு டாக்டர்கள் கூறியது பேரதிர்ச்சி தந்துள்ளது.



ராஞ்சி,


ஜார்க்கண்ட்டின் குட்டா மாவட்டத்தில் வாலிபர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற டாக்டரிடம் சென்றுள்ளார்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். தொடர்ந்து பல முறை இந்த சோதனையை செய்தபின்னர், ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதனால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் சிறுவயதில் இருந்தே அப்படி உள்ளது என அவரிடம் கூறியுள்ளனர். இதன்பின்பு, டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அப்போது, வாலிபரின் உடலுக்குள் முழு அளவில் வளர்ச்சி அடைந்த பெண் இனப்பெருக்க உறுப்புகள் காணப்பட்டு உள்ளன. கருப்பை, அதற்கான குழல் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளும் உடலின் உள்ளே வளர்ந்து இருந்துள்ளன.

இதுபற்றி டாக்டர் தாரா சங்கர் ஜா கூறும்போது, கோடிக்கணக்கானோரில் ஒருவருக்கு இதுபோன்று ஏற்படும். இதன்படி, ஒரே நபருக்கு ஆண் மற்றும் பெண் உள்ளுறுப்புகள் காணப்படும்.

இந்த அறுவை சிகிச்சையில் அவரின் அனைத்து பெண் இனப்பெருக்க உறுப்புகளும் உடலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. அந்த வாலிபர் தற்போது உடல்நலமுடன் உள்ளார் என கூறியுள்ளார்.


Next Story