வெடிகுண்டுகளுடன் இந்திய எல்லையில் பறந்த பாக்.டிரோனை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை


வெடிகுண்டுகளுடன் இந்திய எல்லையில் பறந்த பாக்.டிரோனை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை
x

அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், வெடிகுண்டுகளுடன் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப்பகுதியில் அடிக்கடி பாகிஸ்தான் பகுதியில் இருந்து டிரோன்கள் பறக்கவிடப்படும் என்பதால், கூடுதல் கண்காணிப்பு பணி இங்கு நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், இன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தானுக்குச் சொந்தமான டிரோன் ஒன்று பறந்தது. இதைக் கவனித்த பாதுகாப்பு படையினர் உடனடியாக டிரோனை சுட்டு வீழ்த்தினர். கீழே விழுந்த டிரோனைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில் அதில், காந்தக் குண்டுகள் மற்றும் கையறி குண்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டன.

அடுத்த மாதம் 30 ஆம் தேதி புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ளது. 43 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை, இரண்டு வழிகளில் நடைபெற உள்ளது. அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், வெடிகுண்டுகளுடன் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story