உத்தரகாண்டில் இந்தியா-அமெரிக்கா பிரமாண்ட ராணுவ பயிற்சி - அக்டோபர் மாதம் 2 வாரம் நடக்கிறது


உத்தரகாண்டில் இந்தியா-அமெரிக்கா பிரமாண்ட ராணுவ பயிற்சி - அக்டோபர் மாதம் 2 வாரம் நடக்கிறது
x

உத்தரகாண்டில் இந்தியா-அமெரிக்கா பிரமாண்ட ராணுவ பயிற்சி அக்டோபர் மாதம் 2 வாரம் நடக்கிறது.

புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே அக்ேடாபர் மாதம் பிரமாண்ட ராணுவ பயிற்சி நடக்கிறது. இந்தியாவும், அமெரிக்காவும் 'யுத் அப்யாஸ்' என்ற பெயரில் பிரமாண்ட ராணுவ பயிற்சிகளை அவ்வப்போது நடத்தி வருகின்றன.

கடைசியாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இத்தகைய பயிற்சி நடந்தது. அமெரிக்காவின் அலாஸ்காவில் இப்பயிற்சி நடத்தப்பட்டது.

இந்நிலையில், 'யுத் அப்யாஸ்' 18-வது பிரமாண்ட பயிற்சி, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடத்தப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ஆலி பகுதியில் இப்பயிற்சி நடக்கிறது. அக்டோபர் 14-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை நடக்க உள்ளது. இதில், சிக்கலான எண்ணற்ற பயிற்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இருநாட்டு ராணுவங்களிடையே ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. கிழக்கு லடாக்கில் இந்திய-சீன படைகள் இடையே சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-அமெரிக்கா இடையிலான ராணுவ உறவில் முன்னேற்றம் நிலவி வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு, இந்தியாவுக்கு 'மாபெரும் ராணுவ கூட்டாளி' என்ற அந்தஸ்தை அமெரிக்கா அளித்தது.

இதுதவிர, இந்தியாவுடன் முக்கியமான ராணுவ ஒப்பந்தங்களையும் செய்து கொண்டுள்ளது.


Next Story