கூட்டத்தில் கண்டு கொள்ளாத தொண்டர்கள்... ஆத்திரத்தில் மைக்கை வீசி எறிந்த மந்திரி


கூட்டத்தில் கண்டு கொள்ளாத தொண்டர்கள்... ஆத்திரத்தில் மைக்கை வீசி எறிந்த மந்திரி
x

உத்தர பிரதேசத்தில் கூட்டத்தில் பேசும்போது, அலட்சியத்துடன் தொண்டர்கள் அவர்களுக்குள் பேசி கொண்ட ஆத்திரத்தில் மந்திரி மைக்கை வீசி எறிந்து உள்ளார்.



லக்னோ,


உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் மீன்வள துறை மந்திரியாக இருப்பவர் சஞ்சய் நிஷாத். இந்நிலையில், மாவ் நகரில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியுள்ளார்.

ஆனால், கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் அதனை கவனிக்காமல், அவர்களுக்குள் பேசி கொண்டும், முணுமுணுத்து கொண்டும் இருந்துள்ளனர். அவரது பேச்சை யாரும் கேட்கவில்லை. இதனை பார்த்த நிஷாத்துக்கு ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அவர், நீங்கள் என்னை விட பெரிய அரசியல்வாதியா? அப்படியென்றால் நீங்கள் பேசுங்கள். இல்லையென்றால் என்னுடைய பேச்சை கவனியுங்கள் என கூறியுள்ளார். அதன்பின் கோபத்தில் அவர் மேடையிலேயே மைக்கை வீசி எறிந்து உள்ளார்.

இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதன்பின், தொடர்ந்து மந்திரி பேசுவதற்கு ஏற்ப, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அமைதியானார்கள்.

தொடர்ந்து மைக்கை எடுத்து பேசிய மந்திரி நிஷாத், தொண்டர்களை கடுமையாக சாடினார். நீங்கள் எல்லாம் சமூகத்தில் உயர்நிலையை அடைந்த அரசியல்வாதிகளா? யாரோ சிலரின் அடியை பின்பற்றி நடந்து கொள்கிறீர்கள். நீங்கள் அழிக்கப்பட்டு விடுவீர்கள் என எச்சரிக்கும் வகையில் கூறினார்.

அதன்பின் கட்சியின் ஒரு குறிப்பிட்ட தொண்டர்களை நோக்கி அவர், உங்களுக்கு என்னதான் வேண்டும்? உங்களது வீழ்ச்சியா? என்றும் கேட்டுள்ளார். மேடையில் நான் பேசுகிறேன். கேட்க வேண்டும் என விரும்பினால், கேளுங்கள். அதனை விடுத்து ஏன் பேசி கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் பின்னர் விவாதம் நடத்தி கொள்ளலாம். முதலில் புரிந்து கொள்ள முயற்சியுங்கள் என பேசியுள்ளார்.

வெள்ளம் பாதித்த இந்த மாவட்டத்தில் தவறுதலாக, கூட்டத்திற்கான இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. இதுபற்றி ஊடகக்காரர்கள் மற்றும் நிருபர்களிடம் கூட நான் விவரித்து இருக்கிறேன் என்று அவர் பேசியுள்ளார்.


Next Story