உதய்பூர் படுகொலை; மதம், சமூகம் சார்ந்து குற்றவாளிகள் தப்ப முடியாது: ராஜஸ்தான் முதல்-மந்திரி


உதய்பூர் படுகொலை; மதம், சமூகம் சார்ந்து குற்றவாளிகள் தப்ப முடியாது:  ராஜஸ்தான் முதல்-மந்திரி
x

ராஜஸ்தானில் கொடூர கொலை நடந்து 144 தடை உத்தரவு அமலில் உள்ள சூழலில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதல்-மந்திரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.



உதய்பூர்,



ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தன்மண்டி பகுதியில் பூட்மகால் என்ற இடத்தில் தையல் கடை நடத்தி வந்த தையல்காரர் கன்னையா லால் (வயது 40). இவரது மகன்களில் ஒருவரான 8 வயது மகன், சமூக வலைத்தளங்களில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டார் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக லாலுக்கு கொலை மிரட்டல் வந்து, அவர் போலீசில் புகார் செய்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் 2 பேர் கூர்மையான கத்திகளுடன் கன்னையா லால் கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினர். அவர்கள் தாங்கள் எடுத்து வந்த கத்திகளால் அவரது கழுத்தை அறுத்து தலையை துண்டித்தனர். இதில் அவர் உயிரிழந்து உள்ளார். இதனை தொடர்ந்து கொலையாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி விட்டனர்.

இந்த கொலைக்காட்சிகளை கொலையாளிகளே வீடியோவாக படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சம்பவத்தினை தொடர்ந்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. உள்ளூர் சந்தைகள் மூடப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. கொலையாளிகளை கைது செய்யக்கோரி உளளூர்வாசிகள் போராட்டம் நடத்தினர். இந்த படுகொலைக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனையொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், இது வேதனையான, வெட்கக்கேடான சம்பவம் ஆகும். நாட்டில் தற்போது பதற்றமான சூழல் நிலவுகிறது. பிரதமரும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் நாட்டு மக்களுக்கு உரையாற்றக்கூடாதா? இந்த படுகொலை சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை பகிர்ந்து கொண்டு, நிலைமையை மோசமாக்கி விட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். கொலையாளிகள் மற்றொரு வீடியோவில் பிரதமர் மோடிக்கும் மிரட்டல் விடுத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, உதய்பூர் மாவட்டத்தில் 24 மணி நேரத்துக்கு இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டது.

இந்த படுகொலையை நடத்திய கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பீம் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தானில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் ஒரு மாதத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவையும் ராஜஸ்தான் அரசு அமைத்து உள்ளது. ராஜஸ்தானின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 2 பேரும் கவுஸ் முகமது மற்றும் ரியாஸ் அகமது என கண்டறியப்பட்டு உள்ளனர். இவர்களில் கவுஸ் முகமது கஞ்ஜிபீர் பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார். பில்வாரா பகுதியை சேர்ந்த ரியாஸ், கஞ்ஜிபீரில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

144 தடை உத்தரவை தொடர்ந்து ராஜஸ்தான் முழுவதும் பல்வேறு நகரங்களில் கடைகள், வணிக வளாகங்கள் இன்று அடைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்து இன்றி இன்று காலை முதல் சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. போலீசார் வாகனத்தில் ரோந்து சென்றபடி உள்ளனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் முதல்-மந்திரி விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், மக்கள் அமைதி காக்க வேண்டும். குற்றவாளிகள் எந்த மதத்தினர் மற்றும் சமூகத்தினரை சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் தப்பிக்க விடப்படமாட்டார்கள் என உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என தெரிவித்து உள்ளார்.


Next Story