கழுத்தை இறுக்கி பெண் கொலை: கணவனுக்கு ஆயுள் தண்டனை


கழுத்தை இறுக்கி பெண் கொலை:  கணவனுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 21 July 2023 6:45 PM GMT (Updated: 21 July 2023 6:45 PM GMT)

பெண்ணை கழுத்து இறுக்கி கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சிவமொக்கா-

பெண்ணை கழுத்து இறுக்கி கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தொழிலாளி

சிவமொக்கா டவுன் பொம்மனகட்டே பகுதியை சேர்ந்தவர் அல்லா பக்ஷி (வயது 38). இவரது மனைவி பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அல்லா பக்ஷி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், மனைவியிடம் அல்லா பக்ஷி அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதி இரவு பணிமுடிந்து அல்லா பக்ஷி வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் மதுகுடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், அல்லா பக்ஷி மற்றும் அவரது மனைவி பானு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனைவிைய அல்லா பக்ஷி சரமாரியாக தாக்கி உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது ஆத்திரம் அடங்காத அல்லா பக்ஷி, பானுவை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி அவர் கேபிள் வயரை கொண்டு மனைவியின் கழுத்தை இறுக்கி உள்ளார்.

சிறையில் அடைத்தனர்

அதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பானு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அல்லா பக்ஷி அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த வினோபா நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வினோபா நகர் போலீசார் அல்லா பக்ஷியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு சிவமொக்கா கோர்ட்டில் நடந்து வந்தது. வினோபா நகர் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி கே.மானு நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அதில், மனைவியை கொலை செய்த அல்லா பக்ஷிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 4 மாதம் சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என கூறி நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story