வடகிழக்கில் தொலைநோக்கி வைத்து தேடினாலும் காங்கிரஸ் தெரியவில்லை - அமித் ஷா கிண்டல்


வடகிழக்கில் தொலைநோக்கி வைத்து தேடினாலும் காங்கிரஸ் தெரியவில்லை - அமித் ஷா கிண்டல்
x
தினத்தந்தி 3 March 2023 11:10 AM GMT (Updated: 3 March 2023 12:13 PM GMT)

தொலைநோக்கி கொண்டு தேடிப்பார்த்தாலும் காங்கிரஸ் காண முடியாத அளவுக்கு வடகிழக்கில் காங்கிரஸ் படு அவமானகரமான தோல்வியை சந்தித்துள்ளது என அமித் ஷா கூறினார்

பெங்களூரு

மத்திய உள்துறை மந்திரியும் பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா கர்நாடக மாநிலம் பிடார் பகுதியில் உள்ள பசவகல்யாணில் விஜய் சங்கல்ப் யாத்திரையின் மூன்றாவது ரத யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டுள்ளது. தொலை நோக்கி கொண்டு தேடிப்பார்த்தாலும் காங்கிரஸ் காண முடியாத அளவுக்கு வடகிழக்கில் காங்கிரஸ் படு அவமானகரமான தோல்வியை சந்தித்துள்ளது.

திரிபுராவில் நான்கு இடங்களும், மேகாலயாவில் மூன்று இடங்களும் கிடைத்துள்ளன. நாகாலாந்தில் காங்கிரசுக்கு எதுவும் இல்லை. அப்படியொரு கட்சி கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பே இல்லை.

வடகிழக்கு, குஜராத், உத்தரப் பிரதேசம், கர்நாடகா என இந்தியாவில் எல்லா இடங்களிலும் மோடி மேஜிக் வேலை செய்யும்.

ராகுல் தலைமையில் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் அவர்களும், ஆம் ஆத்மியும் மோடிக்கு எதிராக கோஷம் போட்டு வருகின்றனர். மோடி நீண்ட காலம் வாழ வேண்டும் என மக்கள் பிரார்த்தனை செய்து வருவதால் கடவுள் உங்கள் கோஷங்களை கேட்க மாட்டார் என கூறினார்


Next Story