திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால்; காதலி வீட்டில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால்;  காதலி வீட்டில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

சக்லேஷ்புரா அருகே திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி வீட்டில் வைத்து விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

ஹாசன்:

காதல்

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா ஹலேபேலூர் கிராமத்தை சேர்ந்தவர் அனில் குமார்(வயது 26). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பாவனா என்ற இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. காதலுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து பின்னர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து அனில் குமார், பாவனாவை திருமணம் செய்து கொள்ள முயற்சித்தார். இதையறிந்த பாவனாவின் பெற்றோர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவரை வீட்டு சிறையில் வைத்தனர்.

பெற்றோர் எதிர்ப்பு

இந்த தகவல் அறிந்த அனில் குமார் கடந்த மே மாதம் 28-ந் தேதி காதலி பாவனாவின் வீ்ட்டிற்கு சென்று மகளை திருமணம் செய்து கொடுக்கும்படி அவரது பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து பாவனாவின் பெற்றோர் அனில் குமாரை அவமதித்து பேசியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த அனில்குமார் காதலியின் வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த அனில்குமாரின் பெற்றோர் ஓடிவந்து மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சாவு

ஆனாலும் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி அனில் குமார் உயிரிழந்தார். இது குறித்து அனில் குமாரின் ெபற்றோர், சக்லேஷ்புரா போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாவனாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story