வாலிபர் தலையில் கல்லைப்போட்டு கொலை; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


வாலிபர் தலையில் கல்லைப்போட்டு கொலை; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

பெங்களூருவில் பிறந்தநாள் அன்று தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:

பிறந்தநாள் கொண்டாட்டம்

பெங்களூரு கெங்கேரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கெம்மிபுரா, கோனசந்திரா அருகே நைஸ் ரோட்டில் உள்ள மேம்பாலத்திற்கு கீழே நேற்று காலையில் ஒரு வாலிபர் தலை நசுங்கியபடி மா்மநபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கெங்கேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். முதலில் அவர் யாா்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியாமல் இருந்தது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர், கெம்மிபுரா அருகே எச்.கொல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஹேமந்த்குமார் என்ற திலீப் (வயது 26) என்று உடல் அடையாளம் காணப்பட்டது. அவர், வாகனங்களுக்கான நம்பர் பிளேட்டுகளை தயாரித்தும், அவற்றில் வாகன பதிவு எண்ணை எழுதி கொடுக்கும் கடை நடத்தி வந்ததும் தெரிந்தது. நேற்று முன்தினம் ஹேமந்த் குமாருக்கு பிறந்தநாள் ஆகும். தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அவர் பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்.

தலையில் கல்லைப்போட்டு...

நேற்று முன்தினம் மாலையில் நண்பர்கள் அழைப்பதாக கூறிவிட்டு, ஹேமந்த்குமார் வெளியே புறப்பட்டு சென்றிருந்தார். இரவு 10 மணி வரை குடும்பத்தினருடன் அவர் செல்போனில் பேசி இருந்தார். அதன்பிறகு, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் ஹேமந்த்குமாரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு, அதன்பிறகு, அவரது தலையில் கல்லைப்போட்டு முகம் தெரியாத அளவுக்கு கொலை செய்திருப்பதும், வேறு இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு, உடலை நைஸ் ரோடு மேம்பாலத்திற்கு அடியில் வீசி சென்றதும் தெரியவந்துள்ளது.

ஹேமந்த்குமாரை கொலை செய்த மர்மநபர்கள் யார்?, அவர் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. ஹேமந்த்குமாருக்கு தெரிந்த நபர்களே, அவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள். பிறந்தநாளில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கெங்கேரியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


Next Story