உல்லாஸ் நதியில் அடித்து செல்லப்பட்ட 2 வாலிபர்கள்; கதி என்ன? தேடும் பணி தீவிரம்
உல்லாஸ் நதியில் அடித்து செல்லப்பட்ட 2 வாலிபர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
தானே,
உல்லாஸ் நதியில் அடித்து செல்லப்பட்ட 2 வாலிபர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
2 வாலிபர்கள்
தானே மாவட்டம் உல்லாஸ்நகர் பகுதியில் அண்மையில் பெய்த மழை காரணமாக உல்லாஸ்நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த நிலையில் மும்பையை சேர்ந்த சல்மான் அன்சாரி (வயது24), அவரது நண்பர் சர்பராஜ் அன்சாரி (28) ஆகிய 2 பேர் நேற்று முன்தினம் காலை 11.30 மணி அளவில் உல்லாஸ் நதிக்கு சென்றனர். அங்கு தண்ணீரை கண்ட சர்பராஜ் அன்சாரி குளிக்க ஆசைப்பட்டு நதியில் இறங்கினார். ஆனால் நதியின் நீரோட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனை கண்ட நண்பர் சல்மான் அன்சாரி அவரை காப்பாற்ற ஆற்றில் குதித்தார். ஆனால் அவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
தேடுதல் பணி
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரையும் தேடி வந்தனர். இரவு வெளிச்சம் இன்மை காரணமாக தேடுதல் பணி நிறுத்திக்கொள்ளப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று காலை முதல் மீண்டும் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.