மராட்டியத்தில் கிணறு தண்ணீரை குடித்த 3 பேர் பலி- 47 பேருக்கு தீவிர சிகிச்சை


மராட்டியத்தில் கிணறு தண்ணீரை குடித்த 3 பேர் பலி- 47 பேருக்கு தீவிர சிகிச்சை
x

மராட்டியத்தில் கிணறு தண்ணீரை குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 47 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மும்பை,

மராட்டியத்தில் கிணறு தண்ணீரை குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 47 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிணறு தண்ணீர் குடித்து பலி

மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தில் மேலாகாட் பகுதியில் பாச் டோங்கிரி, கோயலாரி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே கிராம மக்கள் ஊரில் உள்ள திறந்தவெளி கிணறில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்து உள்ளனர். கிணறு தண்ணீர் அசுத்தமாக இருந்து உள்ளது. எனினும் வேறு வழியில்லாமல் கிராம மக்கள் அந்த தண்ணீரை குடித்து உள்ளனர்.

இந்தநிலையில் கிணறு தண்ணீரை குடித்த சுமார் 50 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கங்காராம் நந்தராம் (25), சவிதா சகாதேவ் (30) உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 47 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்-மந்திரி உத்தரவு

இந்தநிலையில் டெல்லி சென்று உள்ள முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு இதுபற்றி தகவல் கிடைத்தவுடன், அவர் அமராவதி மாவட்ட கலெக்டரை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாவட்ட கலெக்டர் பாதிக்கப்பட்ட சிலரின் நிலைமை மோசமாக இருப்பதாக கூறினார். அப்போது முதல்-மந்திரி, தேவைப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்க உத்தரவிட்டார். மேலும் உயிர் பலி ஏற்படாமல் பார்த்து கொள்ளுமாறு கூறினார்.

கிணறு தண்ணீரை குடித்து கிராம மக்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அமராவதி பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story