கோரேகாவ்- முல்லுண்ட் லிங்க் ரோட்டில் குதிரை வண்டி பந்தயம் நடத்திய 4 பேர் கைது


கோரேகாவ்- முல்லுண்ட் லிங்க் ரோட்டில்  குதிரை வண்டி பந்தயம் நடத்திய 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 Jun 2023 7:00 PM GMT (Updated: 20 Jun 2023 7:00 PM GMT)

மும்பை மேற்கு புறநகர் பகுதியான கோரேகாவ்-முல்லுண்ட் லிங்க் ரோட்டில் கடந்த 18-ந்தேதி குதிரை வண்டி பந்தயம் நடத்திய 4 பேர் கைது.

மும்பை,

மும்பை மேற்கு புறநகர் பகுதியான கோரேகாவ்-முல்லுண்ட் லிங்க் ரோட்டில் கடந்த 18-ந்தேதி குதிரை வண்டி பந்தயம் நடப்பதாக தின்தோஷி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது 2 குதிரை வண்டிகளில் 4 பேர் ஒரு பாலத்தில் பந்தயத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று 2 குதிரை வண்டிகளை வழிமறித்தனர். அப்போது 4 பேரிடம் குதிரை வண்டிக்கான உரிமம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பந்தயத்தில் ஈடுபட்ட ரசல் ஜெசின்டோ, லாரி ஜெசின்டோ, பாஸ்கர் வைஷ், திலிப் தக்வா ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த கும்பல் மது குடித்துவிட்டு பாட்டில்களை சாலையில் வீசி சென்றதால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைதான 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story