மர வியாபாரியை கடத்தி ரூ.50 லட்சம் பறிக்க முயன்ற 4 பேர் கைது


மர வியாபாரியை கடத்தி ரூ.50 லட்சம் பறிக்க முயன்ற 4 பேர் கைது
x

மரவியாபாரியை கடத்தி ரூ.50 லட்சம் பறிக்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தானே,

மரவியாபாரியை கடத்தி ரூ.50 லட்சம் பறிக்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரில் கடத்தல்

டோம்பிவிலியை சேர்ந்தவர் ஹிம்மத்நாகர் (வயது45). இவர் மருமகனுடன் சேர்ந்து மரப்பொருட்கள் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஒருவர் அவரது கடைக்கு வந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார். பின்னர் பணம் இல்லாததால் ஏ.டி.எம் மையத்தில் இருந்து எடுத்து தருவதாக கூறி ஹிம்மத்நாகரை உடன் அழைத்து சென்றார்.

சிறிது தொலைவில் சென்ற போது அங்கு நின்றிருந்த காரில் ஹிம்மத்நாகரை கடத்தி சென்றனர். காரில் இருந்த 4 பேர் சேர்ந்து அவரை கயிற்றால் கட்டி வைத்தனர். பின்னா சாகாப்பூரில் உள்ள குடிசை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

பணம் கேட்டு மிரட்டல்

சம்பவத்தன்று இரவு 9.30 மணி அளவில் வியாபாரியின் வீட்டிற்கு அழைப்பு விடுத்து ஒரு மணி நேரத்திற்குள் ரூ.50 லட்சம் தர வேண்டும், இல்லையெனில் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால் பயந்து போன குடும்பத்தினர் பணம் தருவதாக கூறினர். இருப்பினும் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.

4 பேர் கைது

இந்த நிலையில் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து பணத்தை பெற்றுக்கொள்வதாக கடத்தல் கும்பல் தெரிவித்தனர். அங்கு போலீசார் தயார் நிலையில் இருந்தனர். அங்கு வந்த கும்பல் பணத்தை தருமாறு அவரது மருமகனிடம் கூறினர். இதற்கு ஹிம்மத்நாகரை விடுவித்தால் தருவதாக தெரிவித்தார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை கவனித்த போலீசார் விரைந்து சென்று 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் சாகாப்பூரில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஹிம்மத்நாகரை மீட்டனர். கைதான 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story