டெல்லியில் இருந்து மும்பை வந்த விமானத்தில் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை - கல்லூரி பேராசிரியர் கைது


டெல்லியில் இருந்து மும்பை வந்த விமானத்தில் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை - கல்லூரி பேராசிரியர் கைது
x
தினத்தந்தி 28 July 2023 6:45 PM GMT (Updated: 28 July 2023 6:45 PM GMT)

டெல்லியில் இருந்து மும்பை வந்த விமானத்தில் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

டெல்லியில் இருந்து மும்பை வந்த விமானத்தில் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

பெண் டாக்டர்

நாட்டின் தலைநகர் டெல்லியில் இருந்து நிதி தலைநகர் மும்பையை நோக்கி சம்பவத்தன்று விமானம் ஒன்று பறக்க தயாரானது. அந்த விமானத்தில் 24 வயது பெண் டாக்டர் ஒருவர் ஏறி அமர்ந்தார். அதே விமானத்தில் பயணிக்க வந்த 47 வயது கல்லூரி பேராசிரியர் ஒருவர், பெண் டாக்டருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தார். விமானம் அதிகாலை 5.30 மணிக்கு வானில் பறக்க தொடங்கியது. மும்பையை நெருங்கி விமானம் பறந்து கொண்டு இருந்தபோது அந்த பேராசிரியர், பெண் டாக்டரை தகாத முறையில் தொட்டு சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர், பேராசிரியரை கடுமையாக கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விமான பணியாளர்களிடம் பெண் டாக்டர் முறையிடவே, அவர்கள் பேராசிரியரை எச்சரித்தனர். மேலும் இருவரின் தகராறையும் விலக்க முயன்றனர்.

கைது

மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், அவர்கள் 2 பேரும் அங்குள்ள சாகர் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது சக பயணியான பேராசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் டாக்டர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பேராசிரியரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது. நடுவானில் பறந்த விமானத்தில் பெண் டாக்டருக்கு, பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story