8 வயது மகளை துப்பாக்கியால் சுட்ட கட்டுமான அதிபர்- மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம்


8 வயது மகளை துப்பாக்கியால் சுட்ட கட்டுமான அதிபர்- மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம்
x
தினத்தந்தி 25 Sep 2022 4:30 AM GMT (Updated: 25 Sep 2022 4:31 AM GMT)

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 8 வயது மகளை துப்பாக்கியால் சுட்ட கட்டுமான அதிபரான தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

புனே,

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 8 வயது மகளை துப்பாக்கியால் சுட்ட கட்டுமான அதிபரான தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

கட்டுமான அதிபர்

புனேயை சேர்ந்தவர் பாண்டுரங் உபே (வயது38). கட்டுமான அதிபர். இவருக்கு மனைவி மற்றும் ராஜ்நந்தினி (8) என்ற மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு மதுபோதையில் வந்த அவரை மனைவி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டுரங் உபே தான் வைத்திருந்த உரிமம் கொண்ட துப்பாக்கியை எடுத்து மனைவியை நோக்கி குறி வைத்தார்.

இதனை கண்டு பயந்துபோன அவரது மகள் ராஜ்நந்தினி சத்தம் போட்டு கத்தினாள். அப்போது அவர் பெற்ற மகள் என்றும் பாராமல் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றார்.

சிறுமி படுகாயம்

இதனால் சிறுமி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினாள். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி தகவல் அறிந்த சிங்காட் ரோடு போலீசார் மகளை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிய கட்டுமான அதிபர் மீது வழக்கு பதிவு செய்தனர். தப்பி சென்ற அவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெற்ற மகளை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story