தேசிய அளவில் பா.ஜனதா அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி- சரத்பவார் கூறுகிறார்
தேசிய அளவில் பா.ஜனதா அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்வதாக சரத்பவார் கூறியுள்ளார்.
தானே,
தேசிய அளவில் பா.ஜனதா அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்வதாக சரத்பவார் கூறியுள்ளார்.
வயது மூப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் நேற்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் சொந்த ஊரான தானேவுக்கு வந்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய அளவில் பா.ஜனதா அல்லாத கட்சிகளை ஒன்றிணைத்து, பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் கருத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
வயது மூப்பு காரணமாக எந்த பதவி பொறுப்பையும் ஏற்க நான் விரும்பவில்லை. பா.ஜனதாவுக்கு எதிரான பொது கருத்தை உருவாக்க பா.ஜனதா அல்லாத கட்சிகளை ஒன்றிணைக்க மட்டுமே நான் உதவுவேன்.
நிறைவேறாத வாக்குறுதிகள்
2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நல்ல நாட்கள் வரும், இணையம் மூலம் கிராமங்கள் இணைக்கப்படும், ஒவ்வொரு வீட்டிற்கும் கழிவரை, தண்ணீர் மற்றும் அனைவருக்கும் மின்சாரம் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை.
இதேபோல நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் வீடு வழங்கப்படும் என பிரதமர் உறுதி அளித்தார். ஆனால் அரசு தனது வார்த்தைகளை காப்பாற்ற தவறிவிட்டது. இப்போது புதிய வாக்குறுதியாக 2024-ம் ஆண்டுக்குள் இந்திய 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்குவோம் என்று கூறப்பட்டுள்ளது.
கவலைக்குரிய விஷயம்
பா.ஜனதா தங்கள் எதிர்க்கட்சிகள் மீது மேற்கொள்வது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலே தவிர வேறுறொன்றும் இல்லை. இது மிகவும் கவலைக்குரிய விஷயம் ஆகும். பா.ஜனதா ஆட்சி இல்லாத அனைத்து மாநிலங்களிலும் சட்டமன்ற உறுப்பினர்களை பிரித்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. இதற்கு மராட்டியம் சமீபத்திய உதாரணம்.
கேரளா மற்றும் ஆந்திராவில் அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.
எதிர்க்கட்சி தலைவர்களை பயமுறுத்துவதற்காக அமலாகத்துறை, மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் வருமான வரித்துறையை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது.
சிறையில் அடைப்பு
அனில் தேஷ்முக் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் சி.பி.ஐ., அமலாகத்துறை மற்றும் வருமானவரித்துறை 110 ரெய்டுகள் நடத்தி சாதனை செய்திருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
ஆரம்பத்தில் ரூ.100 கோடி அளவிக்கு மோசடி நடந்திருப்பதாக கூறிய விசாரணை அமைப்புகள் பின்னர் அதை ரூ. 4.07 கோடியாக மாற்றியது. இப்போது வெறும் ரூ.1 கோடியே 71 லட்சம் என்கிறார்கள். இவை அனைத்தும் கோர்ட்டில் அம்பலமாகும்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் மற்றும் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இருவரும் தங்கள் கட்சிகளுக்கு ஆதரவாக பேசியதால் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.