கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதல் - பெண் பயணி, நடத்துனர் படுகாயம்
தானேயில் இருந்து மும்பை போரிவிலி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் பெண் பயணி மற்றும் நடத்துனர் படுகாயமடைந்தனர்.
தானே,
தானேயில் இருந்து மும்பை போரிவிலி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று காலை 6 மணி அளவில் சென்றது. இந்த பஸ்சில் 4 பெண்கள் உள்பட 9 பயணிகள் இருந்தனர். மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் வந்த போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்ததது. பஸ்சில் இருந்த 41 வயது பெண் பயணி மற்றும் நடத்துனர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். விபத்து நடந்த உடனே கன்டெய்னர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். நடுரோட்டில் நடந்த விபத்தினால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெண் பயணி, நடத்துனரை மீட்டு கல்வா சிவில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காப்பூர்பாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பிச்சென்ற டிரைவரையும் தேடி வரைகின்றனர்.