கே.இ.எம். ஆஸ்பத்திரியில் வேலை வாங்கி தருவதாக கூறி காவலாளியிடம் ரூ.32 லட்சம் மோசடி - போலீசார் வழக்குப்பதிவு
மும்பை கல்பாதேவியில் மகளுக்கு கே.இ.எம். ஆஸ்பத்திரியில் வேலை வாங்கி தருவதாக கூறி காவலாளியிடம் இருந்து ரூ.32 லட்சம் மோசடி
மும்பை,
மும்பை கல்பாதேவியில் பிரசித்தி பெற்ற மும்பா தேவி கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் ஜெய்கோபால். இவர் கிராபட் மார்க்கெட்டில் உலர்பழங்கள் விற்கும் கடை உரிமையாளர் காலா என்பவரிடம் கடந்த 1995-ம் ஆண்டு முதல் பழகி வந்தார். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜெய்கோபாலின் மகள் ரேடியாலஜி படித்து இருந்ததால் ஆஸ்பத்திரியில் வேலை வாங்கி தரும்படி காலாவிடம் தெரிவித்து இருந்தார். இதற்கு அவர் பரேலில் உள்ள கே.இ.எம். ஆஸ்பத்திரியில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 3 ஆண்டுகளில் ரூ.38 லட்சம் பெற்று உள்ளார். ஆனால் ஜெய்கோபாலின் மகளுக்கு வேலை கிடைத்தபாடில்லை. இதனால் தனது பணத்தை திரும்பி தருமாறு கேட்டு உள்ளார். இதனால் காலா ரூ.6 லட்சத்தை திருப்பி வழங்கி உள்ளார். மீதி ரூ. 32 லட்சத்தை திருப்பி தராமல் மோசடி செய்தார். இதனால் ஜெய்கோபால் அவருக்கு எதிராக எல்.டி. மார்க் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் காலா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.