முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்


முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்
x

தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் போலீசாரிடம் சிக்கினார்.

மும்பை,

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போனில் கொலை மிரட்டல்

உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முகேஷ் அம்பானிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மும்பை கிர்காவ் பகுதியில் உள்ள ரிலையன்ஸ் ஆஸ்பத்திரிக்கு காலை 10.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து 3, 4 முறை போன் செய்தார். அவர், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்.

இது குறித்து உடனடியாக மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ரிலையன்ஸ் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து மிரட்டியவரின் செல்போன் எண்ணை வைத்து அவரை தகிசர் பகுதியில் மடக்கி பிடித்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்

முதல்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "விசாரணையில் போன் செய்து மிரட்டிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்து உள்ளது. சம்பவம் தொடர்பாக டி.பி. மார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்" என்றார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் 'அண்டிலா' ஆடம்பர அடுக்குமாடி பங்களா அருகில் வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் முக்கிய போலீஸ் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் முகேஷ் அம்பானிக்கு வந்த கொலை மிரட்டல் போனால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story