உத்தவ் தாக்கரே வருகையால் அமராவதியில் நவ்நீத் ரானா எம்.பி. போஸ்டர்கள் அகற்றம்


உத்தவ் தாக்கரே வருகையால் அமராவதியில் நவ்நீத் ரானா எம்.பி. போஸ்டர்கள் அகற்றம்
x
தினத்தந்தி 9 July 2023 7:15 PM GMT (Updated: 9 July 2023 7:15 PM GMT)

விதர்பாவில் முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே வருகையால் அமராவதியில் ஒட்டப்படிருந்த நவ்நீத் ரானா எம்.பி. யின் போஸ்டர்கள் அகற்றப்பட்டது.

அமராவதி,

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே விதர்பாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அமராவதி மாவட்டத்திற்கு வருகை தந்தார். இந்தநிலையில் அமராவதி சுயேட்சை எம்.பி. நவ்நீத் ரானா மற்றும் அவரது கணவர் எம்.எல்.ஏ. ரவி ரானா ஆகியோர் அங்குள்ள பெண்கள் உயர்நிலை பள்ளி மைதானத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமன் சாலிசா பஜனை நிகழ்ச்சி நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்கான போஸ்டர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் சார்பில் ஒட்டப்பட்டு இருந்தது. இதற்கிடையே உத்தவ் தாக்கரே வருகையையொட்டி அவரது கட்சியை சேர்ந்த தொண்டர்கள் அந்த போஸ்டர்களை கிழித்தெறிந்து அகற்றினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. எம்.பி. நவ்நீத் ரானாவும் அவரது கணவரும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்தபோது அவரது மாதோஸ்ரீ வீட்டிற்கு முன்னாள் அனுமன் சாலிசா பஜனை நிகழ்ச்சி நடத்தப்போவதாக அறிவித்து, அதற்காக கைதாகி சிறை சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story