பைகுல்லா பெண்கள் சிறையில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


பைகுல்லா பெண்கள் சிறையில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Feb 2023 6:45 PM GMT (Updated: 24 Feb 2023 6:46 PM GMT)

பைகுல்லா பெண்கள் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

பைகுல்லா பெண்கள் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கியால் சுட்டார்

மும்பை பைகுல்லா பகுதியில் பெண்களுக்கான சிறை உள்ளது. இந்த சிறை வளாகத்தின் கேட் வெளியே போலீஸ்காரர் ஷியாம் வார்காடே(வயது48) என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 8.20 மணி அளவில் தனியாக பணியில் இருந்தபோது, திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு கொண்டார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு சிறையில் இருந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து கிடந்த போலீஸ்காரர் ஷியாம் வார்காடேவை மீட்டு அருகில் உள்ள நாயர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

போலீஸ்காரர் பலி

அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நாக்பாடா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட போலீஸ்காரர் ஷியாம் வார்காடேவிற்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறை வளாகத்தில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story