சரத்பவார் பதவி விலகல் மகா விகாஸ் அகாடி கூட்டணியை பாதிக்காது- உத்தவ் தாக்கரே பேட்டி
தேசியவாத காங்கிரசில் இருந்து சரத்பவார் பதவி விலகுவதாக அறிவித்து இருப்பது மகா விகாஸ் அகாடி கூட்டணியை பாதிக்காது என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
மும்பை,
தேசியவாத காங்கிரசில் இருந்து சரத்பவார் பதவி விலகுவதாக அறிவித்து இருப்பது மகா விகாஸ் அகாடி கூட்டணியை பாதிக்காது என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
மகா விகாஸ் அகாடி
தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார், தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதையடுத்து, மராட்டிய அரசியலில் புயல் வீசிக்கொண்டிருக்கிறது.
மகா விகாஸ் அகாடி கூட்டணியின் நிலை என்ன என்றும் கேள்வி எழுந்து உள்ளது. இந்த கூட்டணி சுமார் 2½ ஆண்டு காலம் மராட்டியத்தை ஆட்சி செய்தது.
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் கூட்டணி வைத்து போட்டியிட மகா விகாஸ் அகாடி முடிவு செய்து உள்ளது.
கூட்டணியை பாதிக்காது
இந்நிலையில், சரத்பவார் விவகாரம் தொடர்பாக உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரேயிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறியதாவது:-
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் விலகுவது மகா விகாஸ் அகாடி கூட்டணியை பாதிக்காது. பா.ஜனதாவின் சர்வாதிகாரத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும். அதை யாராலும் தடுக்க முடியாது. நான் பிரதமர் மோடிக்கு எதிரானவன் அல்ல. ஆனால் சர்வாதிகாரத்துக்கு எதிரானவன்.
இவ்வாறு அவர் கூறினார்.