5 மாவட்டங்களில் திடீர் மழை- பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு ஷிண்டே உத்தரவு
மராட்டியத்தில் 5 மாவட்டங்களில் திடீர் மழை பெய்து உள்ளது. மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் 5 மாவட்டங்களில் திடீர் மழை பெய்து உள்ளது. மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.
திடீர் மழை
மராட்டிய மாநிலத்தில் அவுரங்காபாத், நாசிக், வாசிம், தானே, பால்கர் ஆகிய 5 மாவட்டங்களில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நாசமாகின. மும்பையில் கூட சாரல் மழை விழுந்தது. புழுதியுடன் கூடிய பலத்த காற்று வீசியது.
நேற்று முன்தினம் நகரில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று குளிர்ந்த வானிலை நிலவியது.
பாதிப்பு குறித்து விசாரணை
இந்தநிலையில் பருவம் தவறிய மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார். விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக அறிக்கை தயார் செய்ய சம்மந்தப்பட்ட மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், நம்பிக்கையும் கொடுக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு துணையாக மாநில அரசு எப்போதும் இருக்கும்" என்றார்.