பாகிஸ்தான் நாட்டின் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்து பெண்


பாகிஸ்தான் நாட்டின் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்து பெண்
x
தினத்தந்தி 16 May 2021 1:25 PM GMT (Updated: 16 May 2021 1:25 PM GMT)

பாகிஸ்தான் நாட்டின் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்து பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார், சனா ராம்சந்த். அந்நாட்டின் அதிகாரமிக்க மத்திய உயர் சேவைகள் தேர்வில் (சி.எஸ்.எஸ்) வெற்றி பெற்று நிர்வாக சேவை (பி.ஏ.எஸ்) பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்காக நடந்த எழுத்து தேர்வில் 18,553 பேர் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் தேர்ச்சி பெற்ற 221 பேரில் சனா ராம்சந்தும் ஒருவர். நேர்காணல், மருத்துவம் மற்றும் உளவியல் சோதனைகளின் அடிப்படையில் இறுதி தேர்வு நடந்திருக்கிறது. அதில் 2 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளுக்குட்பட்ட தேர்வில் வெற்றி பெற்றிருப்பதோடு இந்து பெண் என்ற அடையாளமும் சனா ராம்சந்தின் தேர்வை கவனம் ஈர்க்க வைத்திருக்கிறது.

சனா ராம்சந்த், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஷிகார்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்த பகுதியில் இந்துக்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். சிறு வயது முதலே படிப்பில் சுட்டியாக விளங்கிய சனா, சிந்து மாகாணத்தில் உள்ள சாந்த்கா மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை பூர்த்தி செய்திருக்கிறார். பின்பு கராச்சியில் உள்ள சிவில் மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணி புரிந்திருக்கிறார். தற்போது சிந்து இன்ஸ்டிடியூட் ஆப் யூராலஜி அண்ட் டிரான்ஸ்பரெண்ட் நிறுவனத்தில் மேற்படிப்பை தொடர்ந்து வருகிறார். விரைவில் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார். 

மருத்துவ படிப்புக்கு இடையே போட்டி தேர்வை எழுதியவர் நிர்வாக பணிக்கு (பி.ஏ.எஸ்) தேர்வாகி இருக்கிறார்.இதுபற்றி டுவிட்டரில் பதிவிட்டவர், ‘‘நான் சி.எஸ்.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். எனக்கு பி.ஏ.எஸ். பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் அருளால் இதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.சனா ராம்சந்துடன் 79 பெண்கள் இறுதி பட்டியலில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் சமூகவலைத்தளங்களில் சனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் பர்ஹதுல்லா பாபரும் வாழ்த்தியுள்ளார். ‘‘டாக்டர் சனா ராம்சந்த் பாகிஸ்தானில் உள்ள இந்து சமூகத்தையும், ஒட்டுமொத்த நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளார்’’ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக 2019-ம் ஆண்டு சுமன்குமாரி என்ற இந்துப் பெண் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது சனா சந்த் அந்நாட்டின் நிர்வாக சேவை பிரிவில் அரசு அதிகாரியாக பணியை தொடங்க இருக்கிறார்.

Next Story