தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்


தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்
x

தேரோட்டத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் கட்டிட வடிவமைப்பில் தலைச்சிறந்து விளங்குகிறது. உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றான இக்கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார்.

அதேபோல வேறு எங்கும் காண முடியாத பிரம்மாண்டமான தோற்றத்தில் நந்தியெம்பெருமான் அருள்பாலிக்கிறார். நந்தியெம்பெருமானுக்கு பிரதோஷம் ேதாறும் அபிஷேகத்தை காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். வராகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன.

இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாள்தோறும் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தேர் வடம்பிடிக்கப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுக்க உள்ளனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தேரோட்டத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.


Next Story