திருமணம் செய்து கட்டிப்போட்டு 110 பவுன் நகை, ரூ.4½ லட்சம் கொள்ளை


திருமணம் செய்து கட்டிப்போட்டு 110 பவுன் நகை, ரூ.4½ லட்சம் கொள்ளை
x

காதலித்து திருமணம் செய்து கட்டிப்போட்டு 110 பவுன் நகை மற்றும் ரூ.4½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக உளுந்தூர்பேட்டை போலீஸ்காரர் மீது திருநங்கை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

திருச்சி மாவட்டம் மருங்காபுரி பகுதியை சேர்ந்தவர் பபிதா ரோஸ். திருநங்கை. இவர் உளுந்தூர்பேட்டை அடுத்த பாலியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்ட்டிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் பல்வேறு சமூகபணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டேன்.

இதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு உணவு ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டேன். அப்போது அந்த சிறப்பு படையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

2 முறை திருமணம்

அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் என்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறினார். அப்போது நான் எனக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்துள்ளது. இருப்பினும் 2 திருமணமும் எனக்கு ஏமாற்றத்தில் முடிவடைந்துள்ளது. எனவே திருமணம் வேண்டாம் என்று கூறினேன். இருப்பினும் அவர் என்னை சமாதானம் செய்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க வைத்தார்.

இதையடுத்து உறவினர்கள் முன்னிலையில் எங்களுக்கு திருமணம் நடந்தது. இந்தநிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது எனக்கு தெரியவந்தது.

நடவடிக்கை தேவை

மேலும் சம்பவத்தன்று என்னை அவர் கட்டிபோட்டுவிட்டு எனது வீட்டில் இருந்த 110 பவுன் நகை, ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றார்.

இது குறித்து திருச்சி போலீசில் நான் புகார் அளித்துள்ளேன். எனவே என்னை ஏமாற்றி பணம், நகையை கொள்ளையடித்து சென்ற அவர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story