போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் பணி இடைநீக்கம்டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி


போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் பணி இடைநீக்கம்டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி
x
தினத்தந்தி 25 Jun 2023 6:45 PM GMT (Updated: 25 Jun 2023 6:46 PM GMT)

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

போலீஸ் நிலையங்கள் திறப்பு

குமரி மாவட்டத்திற்கு வந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேற்று குளச்சலில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக புதிய கட்டிடத்தையும், கொற்றிகோடு போலீஸ் நிலைய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். மேலும் இரணியலில் புதிதாக ரூ.1 கோடியே 67 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட தக்கலை மதுவிலக்கு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு முகாம் அலுவலகம், மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையம் மற்றும் குடியிருப்பு ஆகியவை கொண்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து மதுவிலக்கு போலீஸ் நிலையம் முன்பு மரக்கன்றுகளை நாட்டார். பின்னர் திங்கள்சந்தை காமராஜர் பஸ் நிலையத்தில் கட்டப்பட்டிருந்த புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நாகர்கோவில் ஆயுதப்படை முகாமில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பணி இடைநீக்கம்

தமிழகத்தில் போதை பொருள் இல்லை என்ற நிலை 282 போலீஸ் நிலையங்களில் ஏற்பட்டுள்ளது. போதை பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த போலீஸ் துறையை சேர்ந்த 18 போலீசார், அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் போதை பொருள் நடமாட்டம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் திருட்டு போய் மீட்கப்பட்ட 1½ கிலோ தங்கம், 300 செல்போன்கள், 50 இருசக்கர வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காவலன் செயலி

தமிழ்நாடு போலீஸ்துறையில் முதன்முறையாக பணியிடங்கள் காலியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 1 லட்சத்து 34 ஆயிரம் காவலர்கள், 15 ஆயிரம் ஊர்காவல் படை வீரர்கள் உள்ளனர். தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 10 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்பட்டார்கள். தற்போது 3,700 காவலர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதைப் போன்று அதிகாரிகளை பொறுத்த வரையில் ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினோம். அதன்பிறகு 444 உதவி ஆய்வாளர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட காவலன் செயலி பெண்கள் மத்தியில் சரியாக போய் சேரவில்லை. இதனால் அதுதொடர்பாக தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

பதக்கம்

நாளை (அதாவது இன்று) சர்வதேச போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நாள் ஆகும். முதல் முறையாக தமிழக அரசு இதற்காக பதக்கத்தை உருவாக்கி அறிவித்து உள்ளது. போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய மதுரை ஐ.ஜி. அஸ்ரா கார்க், கோவை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், தேனி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் குமார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முதல் பதக்கம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story