குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
நாகா்கோவில்,
குமரி மாவட்டம் கப்பியறை புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் சேவியர் பாபு (வயது 58). இவர் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக நாகர்கோவில் பெஞ்சமின் தெருவை சேர்ந்த சுபின் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதனைதொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று சுபினை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து சுபினை கோட்டார் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இதேபோல நாகர்கோவில் இறச்சகுளம் பகுதியை சோ்ந்த ராஜவேல் (34) என்பவரை கஞ்சா வழக்கில் பூதப்பாண்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.