கோட்டக்குப்பம் அருகே கொலை முயற்சி வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கோட்டக்குப்பம் அருகே கொலை முயற்சி வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:46 PM GMT)

கோட்டக்குப்பம் அருகே கொலை முயற்சி வழக்கில் கைதான 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம்

புதுச்சேரி மாநிலம் முத்தையால்பேட்டை அருகே உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பஷீர்முஹம்மது மகன் அகமதுஹூசைன் என்கிற அட்டி (வயது 22), முதலியார்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் அஜித்ராஜ் (21). இவர்கள் மீது விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 18.1.2023 அன்று கோட்டக்குப்பம் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சேதப்படுத்தியது தொடர்பாக தட்டிக்கேட்ட பாபு என்கிற பக்ருதீனை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக அகமதுஹூசைன், அஜித்ராஜ் ஆகிய இருவரையும் கோட்டக்குப்பம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து, இவர்கள் இருவரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்களுடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் அகமதுஹூசைன், அஜித்ராஜ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டார். இதையடுத்து அகமதுஹூசைன், அஜித்ராஜ் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்களுக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story