இலங்கையின் புதிய சட்டம் தமிழக மீனவர்களை பாதிக்கும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்


இலங்கையின் புதிய சட்டம் தமிழக மீனவர்களை பாதிக்கும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
x
தினத்தந்தி 7 July 2017 9:18 AM GMT (Updated: 7 July 2017 9:17 AM GMT)

இலங்கையின் புதிய சட்டம் தமிழக மீனவர்களை பாதிக்கும் என பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதிஉள்ளார்.



சென்னை,


பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதி உள்ள கடிதத்தில்,

எல்லை தாண்டி மீன் பிடித்தால் 2 வருடம் சிறை தண்டனையும், ரூ.20 கோடி அபராதமும் விதிக்கப்படும் என இலங்கை அரசு புதிய சட்ட திருத்தம் செய்துள்ளது. அது பாக்ஜலசந்தி கடல் பகுதியில் பல நூற்றாண்டுகளாக மீன் பிடித்து வரும் இந்திய (தமிழக) மீனவர்களின் உரிமையை குறி வைத்து இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாக்ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வருவது தாங்கள் அறிந்ததே. தற்போது இலங்கை அரசு கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள இந்த சட்ட திருத்தம் லட்சக்கணக்கான நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.

மேலும் இலங்கை அரசின் சட்ட ரீதியிலான இந்த நடவடிக்கை தூதரக ரீதியில் நட்பு ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நினைக்கும் முயற்சிக்கு மிகவும் பின்னடைவாக அமையும்.

இலங்கை அரசு மனிதாபிமானமற்ற முறையில் நமது மீனவர்களின் படகுகளை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதன் மூலம் நமது மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் 50 தமிழக மீனவர்களும், 143 மீன்பிடி படகுகளும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசின்இந்த புதிய சட்ட திருத்தம் பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக மீன் பிடிக்க நமது மீனவர்களுக்கு இந்திய அரசியல் சட்டம் வழங்கிய உரிமையை தடுக்கும் நோக்கமாகும்.

எனவே வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய தூதுக்குழுவினர் நமது கடுமையான எதிர்ப்பை உடனடியாக பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பாக்ஜலசந்தி பகுதியில் நமது உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story