உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சட்ட மீறல்களை களைய வேண்டும்


உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சட்ட மீறல்களை களைய வேண்டும்
x
தினத்தந்தி 13 Jun 2018 11:24 PM GMT (Updated: 13 Jun 2018 11:24 PM GMT)

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நடைபெறும் சட்ட மீறல்களை களைய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 2017-ம் ஆண்டில் மட்டும் வெளிநாட்டு நோயாளிகள் 31 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் இதயம், 32 பேருக்கு நுரையீரல் மற்றும் 32 பேருக்கு இதயம் மற்றும் நுரையீரல் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 9-ந் தேதி வரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் வெளிநாட்டு நோயாளிகள் 53 பேர் மட்டுமே.

ஆனால் இந்தியாவில் 5,310 நோயாளிகள் உடல் உறுப்பு தானம் வேண்டி காத்திருக்கின்றார்கள். இந்நிலையில் மனித உடல் உறுப்பு மாற்று சட்டம் 1994 விதிமுறைகளை மீறி வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதும், அதற்காகவே சில பெரும் மருத்துவமனைகள் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு இருப்பதும் மிகப்பெரிய முறைகேடு ஆகும்.

வெளிநாட்டு நோயாளிகளிடம் பணம் கொட்டிக்கிடக்கிறது என்பதற்காக விதிமுறைகளை மீறி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இதையே காரணமாக கூறி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொது சுகாதாரத்துறையை மத்திய அரசின் அதிகார பட்டியலில் சேர்க்கவும் முயற்சிகள் நடைபெறுவதாகத் தெரிகிறது.

மாநில உரிமைகள் ஒவ்வொன்றையும் அடகு வைத்து வரும் எடப்பாடி பழனிசாமி அரசு, சுகாதாரத்துறையையும் மத்திய அரசுக்கு தாரை வார்த்துவிடக்கூடாது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நடைபெற்று வரும் சட்ட மீறல்களை களையவேண்டும். இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்ற சிறப்பு பெற்ற சென்னையில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story